Home arrow News arrow Kana Praba's Review - Yesudas live in Concert Sydney Opera House Oct 2006
Tuesday, 07 October 2008
 
 
Kana Praba's Review - Yesudas live in Concert Sydney Opera House Oct 2006 PDF Print E-mail
yes1.jpgஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை
உலக நாடுகள் ஓவ்வொன்றினையும் எடுத்துக்காட்ட அந்தந்த நாடுகளின் புகழ்பெற்றதொரு அடையாளச் சின்னம் பயன்படும்பாங்கில் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக அமைந்து சிறப்புப் பெறுவது சிட்னி ஒபரா ஹவுஸ். இந்த சிட்னி ஒபரா ஹவுசினை வெறுமனே பார்த்துவிட்டுப் போகவே உலகெங்கிலுமிருந்தும் யாத்திரிகர்கள் வந்து போகும் நேரத்தில் ஒபரா ஹவுசில் தமிழிசைக்காற்று அடிக்கப் போகின்றது என்றால் விடுவார்களா நம் தமிழர்கள்.

கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. இதை சிட்னி சிம்பனி என்ரபிறைசஸ் ஸ்தாபனம் ராம்ஸ் உணவகத்தின் அனுசரணையோடு நடாத்தியது.

சரஸ்வதி பூசைக் கடைசி வீடுப் பூசை நாளில் சிட்னிச் சனம் இரவுப் பூசையை மதியத்துக்குத் தள்ளி வைத்து (கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று)மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாலை 6 மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு முன்பே காரில் ஒபரா ஹவுசை நோக்கிப்படையெடுத்தது. 5 மணிக்கு முன் பார்க்கிங்கில் விட்டால் 39 டொலர் கட்டவேணும் என்ற ஒருமித்த சிந்தனை எல்லாக் கார்க்காரர்களிடமும் இருந்தது போலும். (ஏன் அநியாமாய் உவங்களுக்கு குடுக்கவேணும்) காரின் மணிக்கூண்டு 5 ஐக்காட்ட வெளியில் நோ பார்க்கிங்கில் (No parking) கூடத் தற்காலிகமாகத் தரித்து நின்ற கார்ச்சக்கரங்கள் ஒபரா ஹவுஸ் வாகனக் காப்பகத்துக்குள் ஊடுருவின.


இந்நிகழ்ச்சி பற்றிய என் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளைப் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1975 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது இது.
ஐந்து அரங்கங்களைக் கொண்ட இந்த ஒபரா ஹவுஸில் மிகப்பெரிய அரங்கான The Concert Hall இல் ஜேசுதாஸ் குழுவின் இந்த இசை வேள்வி நடந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக முன் ஒபரா ஹவுஸ் சுற்றுலா வழிகாட்டிப் பெண்மணி இந்த மண்டபத்தில் சிறப்பைச் சொன்னது வெகு சிறப்பாக இருந்தது. மேலே அந்தத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கூடுகள் ஒலியமைப்புக்கேற்ற விதத்தில் தம்மை அடிக்கடி மாற்றிக்கொண்டு இசையின் துல்லியத்தைத் தரும் என்று சொன்னவர் இந்த அரங்கு 2670 இருக்கைகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் 2100 வாக்கில் இரசிகர்கள் வந்ததாக என்னிடம் சொன்னார். காரணம் அரங்கின் பின் புற இருக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களின் செளகரிகம் கருதி நிரப்பவில்லை.)

5.30 மணிக்கே இரசிகர்கள் தம் இருக்கைகளில் அமரத் தொடங்கி 6 மணிக்கு முன்பே அரங்கை நிரப்பியிருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டு முறைப்படி 6.15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
தொகுப்பாளராக பி.பி.சி. தமிழ்ச்சேவை புகழ் விக்னராஜா அல்ட்டல் சக ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பானதொரு அறிவிப்பைச் சிறப்பாகவே செய்திருந்தார், பாடல்கள் வெளிவந்த ஆண்டு, படத்தின் பெயர் போன்ற விபரங்களைச் சொன்னவர் அந்தப் பாடல்களின் சிறப்பையும் சொல்லியிருக்கலாம் (ஆனாலும் பரவாயில்லை). சில அறிவிப்பாளர்கள் போல் 5 நிமிடப் பாடலுக்கு 10 நிமிட அறுவைக்கச்சேரி வகையறாக்கள் எல்லாம் இவரிடம் தென்படாதது மகா ஆறுதல்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஜாதி, மதம் , மொழி எல்லாம் கடந்து நாம் இருக்கவேண்டும் என்று தனது வழக்கமான அக்மார்க் உரையுடன் கே.ஜே.ஜேசுதாஸ் மகா கணபதிம் பாடலோடு இந்த இசை வேள்வியை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் போது ஒருவித பய உணர்வுடன் தான் சென்றிருந்தேன். காரணம் கடந்த ஜனவரி 10, 2000 ஆம் ஆண்டு மெல்பனில் எஸ்.பி.பி. யோடு வந்த யேசுதாஸின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அந்த நாள் தான் ஜேசுதாசின் 60 ஆவது பிறந்த நாள் கூட. மனுசர் பாடலின் இசைக்கு இசையாமலும் வரிகளைத் தப்புத் தப்பாகவும் பாடியிருந்தார். இந்த மகா கலைஞன் இப்படிப் பாடித் தன்னிடம் ரசிகர்கள் கொண்டிருக்கும் அபிமானத்தினை இழந்துவிடக்கூடாது என்று அப்போது நினைத்திருந்தேன். ஆனால் 6 ஆண்டு கழிந்த நிலையில் எனக்கு வயசு 25 தான் என்று முறுவலோடு சொல்லிகொண்டே அவர் ஆரம்பித்து வைத்த "விழியே கதையெழுது" என்று குரலினிமையோடு சொற்பிழையறப் பாடியது அவரின் இந்த வாக்குமூலத்தினை இளமையோடு மெய்ப்பித்தது.

முன் வரிசையில் இருந்த டொக்ரர் மாருக்குள்ளும் BMW கார் வச்சிருக்கும் முதலாளிமாருக்குள்ளும் (VIP seats) இருந்த ஒருவர் அடிக்கடி இருக்கையில் இருந்து எட்டிப் போய் ஜேசுதாசிடம் தபேலா இன்னபிற வாத்தியங்களின் சத்தத்தைக் குறைக்குமாறு சொல்லவும் பல்கனியில் அது இசையில் குறைச்சலையும் உண்டுபண்ணி மேல் பாகத்தில் இருந்த எம்மை எரிச்சல் கொள்ளவைத்தது. " இவர் எப்ப யேசுதாசிடம் வாங்கிக் கட்டப் போறாரோ தெரியவில்லை" என்று என் அடிமனது பேசிக்கொண்டது.

ஜேசுதாஸ் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் நிறையப் பேசினார். ரசிகர்கள் கேட்கும் பாடல்களைக் காது கொடுத்துக் கேட்டு, சரி மலையாளம், சரி தமிழ், சரி தெலுங்கு, சரி ஹிந்தி என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே பாடித் திருப்தியளித்தார். ஆனால் இவரின் இந்தப் பலவீனத்தைத் தங்கள் பலமாக நினைத்த ரசிகர்கள், தமிழ்ப் பாட்டு, மலையாளம் வேணும், தெலுகு பிளீஸ் என்று கத்தினார்கள். அப்போது முன்னர் கால்கரியில் நடந்த கச்சேரியில் ஒருவர் தன்னிடம் சீனப் பாடலைப் பாடுமாறு கேட்டதற்கு தானும் அதே சீனர்களின் பாடும் தொனியில் பாடியதாகச் சொல்லிப் பாடியும் காட்டினார். அப்போது ஆறு வயதாக இருந்த விஜய் பிறகு ஒவ்வொரு இரவிலும் " டாடி டாடி எனக்கு சீனப்பாட்டு பாடுங்க" என்று கஷடப்படுத்தியதையும் சொல்லி, மேற்கத்தேயப் பாடல், சீன இந்தியப் பாடல்களின் அடித்தளம் ஒன்று தான் என்பதை ஒரு ஸ்வர வேள்வி கொடுத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

மேடையில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேசிய ஜேசுதாசை ஆவென்று வாய் பிளக்கப் பார்த்த இரசிகர் இடைவேளையில் வெளியில் வந்தபோது என்னிடம் சொன்னார் இப்படி "ஆளுக்கு வயசு போட்டுது".

பொம்மை படத்தில் இடம்பெற்ற தன் முதற் தமிழ்ப் பாட்டு அனுபவத்தைச் சொல்லும் போது அந்தப்படத்தின் இசையமைப்பாளர் சக இயக்குனர் வீணை பாலச்சந்தரின் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்றபோது எந்தவொரு சக வாத்தியக்கலைஞரும் இல்லாத அந்த வெறுமையான கூடத்தில் "நான் எப்படிக் கையை ஏற்றி இறக்குகிறேனோ அப்படி நீ பாடினால் போதும்" என்று பாலச்சந்தர் சொல்ல, தான் கடனே என்று பாடியதாகவும், பிறகு அந்தப் பாடல் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலாக அவர் எடுத்திருந்தார் என்றும் இதுபோலக் காட்சியின் பொருத்தத்திற்கேற்ப பாடல் வரவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது என்று இரு தடவை பிழையாகச் சொல்லி ராமமூர்த்திக்கு அந்தப் பாடலின் பெருமையில் பங்கு கொடுத்துவிட்டார்.
இளையராஜா ஒருமுறை தன் வீட்டுப் பூஜை நிகழ்வில் " அண்ணே, நீங்க போட்ட பிச்சையில தான் நாங்க வாழுறோம்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்துச் சொன்னதாகவும்" அப்படிச் சொல்லாதே தம்பி" என்று அவர் தன்னடக்கமாக குழைந்ததையும் சொல்லி நெகிழ்ந்தார் ஜேசுதாஸ்.


yes1.jpg பாடகி மஹதி ஆளும், பெயரும், குரலும் இணைந்து முப்பரிமாண அம்சமாக இருந்தார். தனக்கு பாடகி ஜானகி பிடிக்கும் என்றவாறே "சின்னச் சின்ன வண்ணக்குயில்" மெளனராகப் பாடலைப் பாடினார். பாடல் பாடியதில் அவர் குறை வைக்கவில்லையென்றாலும் 2000 ஆம் ஆண்டு மெல்பன் மேடையில் கேட்ட ஜானகி அம்மாவின் குரல் முன்னுக்கு வந்து நினைப்பில் வியாபித்தது. தஞ்சாவூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்து ஜேசுதாஸ் போன்ற முன்னோடிகளின் சங்கீதம் கேட்ட ஈர்ப்பில் தன் இசையை வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார். சன் மியூசிக் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லாமல் அட்சர சுத்தமாக இருந்தது அவர் தமிழ்.


மஹதிக்குப் பெரிதாக வேலையில்லை. அவரின் தனிப் பாடலான “ஐயய்யோ ஐய்யயோ புடிச்சிருக்கு” பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர், மற்றய பாடல்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் தோள் கொடுத்தார். மஹதிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பல் டாக்டரை மணம் முடிக்கப் போகிறார் என்ற தகவலை ஜேசுதாசே சொன்னார். கூடவே " எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு" என்று குறும்பாகச் சொன்னார்.

உன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்" என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.

“ஆறு வயசில ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்” (அந்த நிகழ்வில் குட்டிப் பெண் சுஜாதாவைக் கைதூக்கி மேடையில் ஏற்றியதை நினைவு கூர்ந்தார் ஜேசுதாஸ்) வழங்கித் என்று பேச்சு தன் தனிப்பாடல்களான " பூப்புக்கும் ஓசை" (மின்சாரக்கனவு), "ஒரு இனிய மனது" (ஜானி), "நேற்று இல்லாத மாற்றம்"(புதியமுகம்) பாடல்களையும் பாடிக் கூடவே ஜேசுதாசுக்கு மற்றய பாடகிகள் பின்னணிக் குரல் கொடுத்த பாடல்களை இணைந்து சிறப்பாகவே வழங்கினார். " தித்திக்குதே " பாடலை இவர் பாடாமல் விட்டிருக்கலாம் என்று பின் சீட்டிலிருந்து முணுமுணுப்புக் கேட்டது. யாரோ அன்பரின் நேயர் விருப்பமாக ரோஜா படப் பாடலான " புது வெள்ளை மழை" பாடலின் ஒரு சில அடிகளை விஜய் ஜேசுதாசுடன் பாடினார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறரோ தெரியவில்லை பெங்களூர் பனர்கட்டா ரோட் I.T கம்பனியில் வேலை பார்க்கும் Fresh Graduate போல இருந்தார். ஆனால் தனக்கு 20 வயதில் மகள் ( இவர் மகள் ஸ்வேதா பாரிஜாதம் பாடல் "ஒரு நதி" பாடியிருக்கிறார்) பட்டப்படிப்பு படிப்பதாகவும்
சொல்லித் தன் இளமை ரகசியத்துக்கு ஆப்பு வைத்தார்.


yes1.jpg 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குக் குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார், அந்தெ நிகழ்வில் மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டபோது " எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்" என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.

மகன் தந்தைக் காற்றும் உதவி என்பது போல இந்த இசை நிழச்சிக்கு விஜய் ஜேசுதாசின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தன் " எனக்குப் பிடித்த பாடல்" (ஜூலி கணபதி) பாடலின் ஒரு சில வரிகளைப் பாடி முழுமையாகத் தந்திருக்கலாமே என்ற ரசிகர்களின் வயிற்றெரிச்சலை எடுத்துக்கொண்டாலும் "அந்த நாள் ஞாபகம்'" (அது ஒரு கனாக்காலம்), சுஜாதாவோடு "ஆசை ஆசை" (தூள்) , "தாவணி போட்ட தீபாவளி" (சண்டக்கோழி) போன்ற இனிமையான பாடல்களை அள்ளித் தெளித்தார். இவரின் பெரிய பலம் மேடைக் கூச்சமின்றி ஆடி ஆடித் தமாஷ் பண்ணிப்பாடுவது ஒன்று என்றால், இன்னொன்று மற்றைய பாடகர்களின் பாடலைப் பாடும் போது அந்தப் பாடகரின் குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிப் பாடியது. "ஒரு சிரி கண்டால்" என்ற அவரது மலையாளப் பாடல் எப்படி மொழி கடந்து அவர் குரலினிமையால் ஈர்த்ததோ அதே போன்று Bunty Aur Babli ஹிந்திப் படப்பாடல் “கஜ்ரா ரே” ரசிகர்களைத் துள்ளவைத்தது. இந்த ஹிந்திப் பாடலுக்கு எனக்கு முன் வரிசையில் பல்கனியில் இருந்த தாத்தா கையை அசைத்து உணர்ச்சிவசப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

"பூவே செம்பூவே" (சொல்லத்துடிக்குது மனசு) பாடலில் இளையராஜாவின் இசையமைப்பின் சிறப்பைச் சிலாகித்த ஜேசுதாஸ் பாடலைப் பாடும் போது இசை வேறு பக்கமாகவும் தன் பாடலை வேறுபக்கமாகவும் மாற்றிச் சலனப்படுத்தினார், பாடல் முடிவில் வர ஆரம்பித்த கைதட்டலைத் தடுத்து முழுமையாக அந்த இசைக் கலவை முடிவது வருவது வரை கேட்கவைத்து கை தட்டலைத் தொடரவைத்தார். கண்ணதாசனின் இறுதிப் பாடலான "கண்ணே கலைமானே" பாடல் தன்க்குக்கிடத்தது பாக்கியம் என்று சொல்லிப் பாடினார். சுஜாதாவுடன் "தென்றல் வந்து உன்னைத் தொடும்", "விழியே கதையெழுது", "கல்யாணத்தேனிலா" , "வெள்ளைப்புறா ஒன்று", பாடல்களையும் மஹதியுடன் கேளடி கண்மணியில் இருந்து "தென்றல் தான்" பாடும் போது மஹதியிடம் என்ன ராகம் என்று சொல்லச் சொல்லிப் பாடினார். அருமையான பாடல்.
முன் வரிசை ரசிகர்களுக்காக " மரி மரி நின்னை' பாடலின் ஒரு சில வரிகளைப் பாடியவர், கன்னடப் பாட்டுக் கேட்டவர்களுக்காகத் தன் பாணியில் " கிருஷ்ணா நீ பேகனே" பாடியது கொலோனியல் கசின்னை மறக்கடித்து மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.
"தெய்வம் தந்த வீடு" பாடலை அவர் பாடும் போது சீடியில் கேட்கும் உணர்வு ஆனால் விஜய் ஜேசுதாஸ் பின்னணியில் கை கொடுக்க அவர் பாடிய " என் இனிய பொன் நிலாவே" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு போல் வேகமாகப் பாடியது உறுத்தல்.

தன் நண்பன் அமரர் ரவீந்திரனுக்கு சமர்ப்பணம் என்றவாறே "ப்ரமதவனம் வீண்டும்" (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) பாடி வசீகரித்தவர் "பச்ச பனங்கத்தி" என்ற பிரபலமான பழைய மலையாளப் பாடலைப் புது மெருகேற்றிய ஜெயசந்திரன் என்ற மலையாள இசையமைப்பாளர் பெயர் சொல்லிப் பாடியும்(தன் மனைவிக்கு ரொம்பப் பிடித்த பாடல் என்று மைக்கில் மெதுவாகக் கிசுகிசுத்தார்), நாகூரில் இருந்து இடம் பெயர்ந்து கேரளாவில் வாழும் தமிழ் கலந்த மலையாளிகள் (இவர்களை மாப்பிளை என்று அழைப்பதாகச் சொன்னார்)பாடும் பாடல் பாடியும் சிறப்பித்தவர் தேசிய விருதை இவருக்கு கொடுத்த சிற்சோர் ஹிந்திப்படப் பாடலான "கோறித்தெரா" மற்றும் தெலுங்கில் பாடித் தேசிய விருது கிடைத்த மேக சந்தேசம் படப்பாடலான "ஆகாச தேசான" என்ற பாடலையும் பாடி மகிழ்வித்தார்.

நிறைவில் மற்றய பாடகர்களுடன் செம்மீன் படப் பாடலான "பெண்ணாலே" பாடினாலும் அவரின் ஆன கடலினக்கரை போனோரே பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம். அலுக்கக் கூடிய பாடலா அது?

 முடிவாக யாரோ ஒருவரைத் திருப்திப்படுத்தவோ என்னவோ "விஸ்வநாதன் வேலை வேணும்" என்ற பாடலை விஜயுடன் பாடினார், இதைப் பாடி நிறைவு செய்யாமல் இருந்தால் இன்னும் இனிய பல இசைஅனுபவதோடு திரும்பியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.

தன் சொந்த இசைக்குழுவான தரங்கிணி மூலம் ஜேசுதாஸ் குழு படைத்த இந்த இசைவேள்வியால் ஒபரா ஹவுஸிற்குத்தான் பெருமை. என் போன்ற எண்பதுகளின் இரசிகனுக்கு இசை நிகழ்ச்சி சக்கரைப் பந்தலில் (ஒபரா ஹவுஸ்) ஜேசுதாசின் தேன் மாரி.

yes1.jpgநடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள..... அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர்.... கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் "கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே..."

கடந்த ஏப்ரல், 2006 யாழ்ப்பாணம் போன போது சில நினைவுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் இடங்களை என் கமராவில் சுட்டுக்கொண்டேன். ஒரு ஓட்டோவில் இருந்தவாறே ஒவ்வொரு இடங்களுக்குமாகத் தேடிப் போய்க் கமராக் கண்ணில் சுட்டவேளை வீரசிங்கம் மண்டபத்தின் நினைப்பும் வந்தது. ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். " அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ" என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.

"எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது" ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.

Review By:kanapraba.jpg

கானா பிரபா





Voice Clips of the Program
http://www.tamilsydney.com/content/view/68/37/

< Previous   Next >
Contribute

Please send News/Stories
to 
News@TamilSydney.com
Photos
to
Photos@TamilSydney.com

Advertise

To Advertise in
TamilSydney.com
email

Advt@TamilSydney.com

 
Top! Top!

Terms of use - TamilSydney.com Website 2006 All rights reserved | www.TamilSydney.com | Editor@TamilSydney.com